
சொத்து வரி உயர்வு விவகாரத்தை திசை மாற்றவே மொழிப் பிரச்சினையை திமுக கையில் எடுத்து செயல்படுகிறது என்று தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
குடிநீர் இணைப்புகள்
சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'சமூக நீதிக்கான 2 வாரம்' எனும் தலைப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் திட்டம் பற்றி அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் குடிநீருக்கென ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய அரசு என்றால், அது பாஜக அரசுதான். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் 3 லட்சமாகத்தான் குடிநீர் இணைப்புகள் இருந்தன. ஆனால், வெறும் 3 ஆண்டுகளுக்குள் குடிநீர் இணைப்பு 10 லட்சமாக வழங்கபட்டுள்ளன. தமிழகத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
போராட்டம் மடை மாற்றம்
திமுக அரசு சொத்து வரியை அதிக அளவில் உயர்த்தியுள்ளது. சொத்து வரி உயர்வுக்கு எதிராக தமிழக பாஜக போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தை திசை மாற்றுவதற்காகத்தான் மொழிப் பிரச்சினையை கையில் எடுத்து பேசி வருகிறது திமுக. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு விரைந்து நடைவடிக்கை எடுக்கும். தமிழகம் முழுவதும் நாங்கள் மின் இணைப்புகளை வழங்க தயாராகவே இருக்கிறோம். ஆனால், அதில் அணில் போகாமல் திமுக அரசால் பார்த்துகொள்ள முடியுமா?” என்று வி.பி. துரைசாமி தெரிவித்தார்.
அணில் பேச்சுகள்
கடந்த ஆண்டு கோடை காலத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை எழுந்தது. அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மரக் கிளைகள் வெட்டப்படாததால், அணில்கள் மூலம் மின் தடை ஏற்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜியின் இந்தப் பதிலால் அவரை எதிர்க்கட்சிகள் கிண்டலடித்தன. தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘அணில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கிண்டலடித்து பேசியிருந்தார். இந்நிலையில் பாஜக துணைத் தலைவரும் அதே பாணியில் கிண்டலடித்து பேசியிருக்கிறார்.