கொரோனா தொடர்பாக திமுக அரசுக்கு அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயார்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 4:04 PM IST
Highlights

கொரோனா காலக்கட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, புதிய அரசிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயாராக உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

கொரோனா காலக்கட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, புதிய அரசிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயாராக உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், உலகளாவிய கொரோனா நோய் தொற்று இருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த நேரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, புதிய அரசிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயாராக உள்ளதாக கூறினார். மேலும், பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்றும், அதற்கு தானே உதாரணம் எனவும் கூறினார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் தொற்று ஏற்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். கொரோனா அறிகுறி வரும் போதே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தாமாக எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள கூடாது என்றும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு அமைத்துள்ள அனைத்து கட்சி ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தமிழக அரசு இடமளித்துள்ள நிலையில் விஜய பாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.  

 

click me!