
இட ஒதுக்கீடு ரத்து
புதுவையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தாவிட்டால் களத்தில் இறங்கி போராட உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது! புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும்.
களத்தில் இறங்கி போராட்டம்
புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி என தெரிவித்துள்ளார், எனவே வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா.... நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்! என புதுவை மாநில அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்