என்.எல்.சி. பங்குகளை விற்பது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமம்; ராமதாஸ் கண்டனம்! 

First Published Oct 24, 2017, 10:54 AM IST
Highlights
Ramadoss condemned


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என்.எல்.சி. இந்தியா என்று அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 15% பங்குகளை பங்குசந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் என்.எல்.சி. பங்குகளை விற்பது கண்டிக்கத்தக்கது என்று அதில் கூறியுள்ளார்.

நெய்வேலியையொட்டிய 23 கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் தாங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த நிலங்களை நிலக்கரி எடுப்பதற்காக விட்டுக் கொடுத்து விட்டு வெளியேறி இருக்காவிட்டால் என்.எல்.சி. இந்தியா என்ற நிறுவனமே உருவாகியிருக்காது. 60 ஆண்டுகளுக்கு முன் நிலம்
வழங்கியவர்களுக்கு நியாயமான விலை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என அப்போது அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி. இந்தியா நிறைவேற்றவில்லை.  அதனால், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக கருதப்பட வேண்டும்.
அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பங்குகளை விற்க மத்திய அரசு துடிக்கக்கூடாது என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டிய தேவையும் இல்லை. நவரத்தினா நிறுவனமான என்.எல்.சி.யின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.2368.81 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபத்தில் பெரும்பகுதி மத்திய அரசுக்கு  
ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது அதன் 15% பங்குககளை தனியாருக்கு விற்பது பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமான செயலாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.எல்.சி. நிறுவன பங்குகளில் 89.32% பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. 4.06% வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமும், 3.91% பங்குகள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96% பங்குகள் காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மத்திய
அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் அடிப்படையில் தான் பங்குகள் விற்கப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கட்டாயமாக இதை செய்ய வேண்டுமென்றால் அந்த பங்குகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் தந்த
உழவர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக தர வேண்டுமே தவிர, தனியாருக்கு விற்கவே கூடாது.

15% பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிப்பதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!