ராஜ்யசபா தேர்தல்..! பொறுமையை சோதித்த அதிமுக..! டென்சனில் திமுக பக்கம் ஒதுங்கிய பாஜக..!

By Selva KathirFirst Published Aug 20, 2021, 10:16 AM IST
Highlights

தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராகியுள்ள எல்.முருகனுக்கு வழங்க பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை ஒதுக்குவதாகவும் ராஜ்யசபா எம்பி பதவியை கொடுப்பது கடினம் என்று கூறியுள்ளதாக சொல்கிறார்கள். 

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில் பாஜக மனது வைத்திருந்தால் அதில் ஒரு இடம் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும் என்கிற நிலையில் தற்போது அது கைவிட்டு சென்றுவிட்டது.

அதிமுக எம்பி முகமது ஜான் மறைவு, வைத்திலிங்க மற்றும் கே.பி.முனுசாமியின் ராஜினாமா போன்ற காரணங்களால் தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாகின. தற்போது தமிழக சட்டப்பேரவையில் உள்ள பலத்தின் படி மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், இரண்டு இடங்களை திமுகவும், ஒரு இடத்தை அதிமுகவும் கைப்பற்ற முடியும். ஆனால் மூன்றுக்கும் தனித்தனியாகவோ அல்லது ஒரு இடத்திற்கு முதலிலும் பிறகு இரண்டு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றால் மூன்றையும் திமுகவே பெற இயலும்.

இதனால் தேர்தல் தனித்தனியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக அணுகியது. இதே போல் ஒரே நேரத்தில் மூன்று பதவிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணைய கதவுகளை தட்டியது. ஆனால் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் திமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது. ஏனென்றால் தமிழகத்தில் மூன்று இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் முதலில் காலியான முகமது ஜான் இடத்திற்கு மட்டும் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதன் மூலம் இந்த எம்பி பதவியை மட்டும் அல்ல, முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளதால் காலியாகியுள்ள இரண்டு எம்பி பதவிகளும் திமுகவிற்கே கிடைக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் அதிமுக பிடிவாதம் காட்டியது தான் என்கிறார்கள். ஏனென்றால் இந்த முறை கூட்டணி என்கிற முறையில் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை அதிமுகவிடம் பாஜக கோரி வந்துள்ளது. காரணம் அந்த ஒரு இடத்தை தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராகியுள்ள எல்.முருகனுக்கு வழங்க பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை ஒதுக்குவதாகவும் ராஜ்யசபா எம்பி பதவியை கொடுப்பது கடினம் என்று கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் தான் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் இறுதி முடிவுக்கே பாஜக விட்டுவிட்டதாக கூறுகிறார்கள்.

ஒரு வேளை அதிமுக இறங்கி வந்திருந்தால் மூன்று எம்பி பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த பாஜக உதவியிருக்கும் என்கிறார்கள். பாஜகவின் இந்த நடவடிக்கையால் திமுக தான் பலன் அடையும் என்று தெரிந்திருந்தாலும் கூட தங்களுடன் உடன்படவில்லை என்றால் என்ன மாதரியான விளைவுகளை அதிமுக சந்திக்க நேரிடும் என காட்டவே பாஜக இப்படி நடந்து கொண்டதாக சொல்கிறார்கள்.  

click me!