
தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி, வரும் சட்டசபை தேர்தலில் அவர் பிறந்த ஊரான வேப்பனப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மதியழகன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும் தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி
தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று தமது இணையதளத்தை ரஜினிகாந்த தொடங்கினார். தமது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதைதொடர்ந்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ரஜினிமன்றம் இணையதளம், செயலி அறிமுகத்தை தொடர்ந்து டிவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவில் பேசி வருகின்றனர்.
ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் என்றும், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி அப்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வகையில், ரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பத்தில், புதிய மன்றங்களைத் தொடங்கும் பணி நேற்று துவங்கியது. இதனை கிருஷ்ணகிரி ரஜினி ரசிகர்மன்ற தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார். நாச்சிக்குப்பத்தில் ரஜினியின் பெற்றோர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ரானோஜிராவ் ராம்பாய் பொதுநல அறக்கட்டளை முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் காலண்டரை வெளியிட்டு மன்றங்கள் துவங்கும் பணி துவங்கியது.
இதன் பின்னர், மதியழகன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஜினி தமிழன் இல்லை என ஒரு சில அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். இதைத் தவிடுபொடியாக்க தமிழகத்தில் ரஜினி பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் புதிய மன்றங்களைத் தொடங்கும் பணியை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
தமிழக மக்கள் ரஜினிக்கு துணை நிற்பார்கள்; சட்டசபை தேர்தலில் ரஜினியின் பிறந்த கிராமம் இருக்கும் வேப்பனப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம் என்றும் மதியழகன் கூறினார்.