
நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் சந்திப்பில் 5வது நாளான இன்று அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வந்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் அவர் பேசும்போது, "ஒழுக்கம் தான் வாழ்வில் முக்கியம் அதை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும்" என ரசிகர்களிடையே தனக்கே உரிய ஸ்டாலில் கலக்கினார்.
வந்திருந்த ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று பேசும்போது அரசியலில் குதிப்பதை தீர்மானித்தது போல் பரபரப்பாக பேசினார்.
மேலும் ரஜினிகாந்த் பேசுகையில், "எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். தமிழர்கள் தான் என்னை தமிழர் ஆக்கினார்கள், நான் பச்சைத் தமிழன் தான்.என்னை இங்கிருந்து போ போ என்றால் இமயமலை தான் போவேன்.
நல்ல நாடு நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஆனால் சிஸ்டம் கெட்டுப்போச்சே, இன்றைய அரசியல் கெட்டு போயிருக்கிறது; மக்களின் மன ஓட்டத்தை மாற்ற வேண்டும், அனைவரும் அவரவர் கடமையை செய்யுங்கள்; போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம், நானும் போர் வரும் போது சொந்த மண்ணிற்காக இறங்கி போராடுவேன்", இவ்வாறு அவர் பேசினார்.