
திருப்பதி கோயிலுக்கு விஐபிக்கள் சென்றால் ப்ரோட்டோகால் முறைப்படி அவர்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் தமிழக பால்வளத்துறை அமைச்சரான தம்மை திருப்பதி கோயில் நிர்வாகம் அவமதித்து விட்டதாக கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
தமிழக அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டும் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் இரவு முழுவதும் தவித்ததாக ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது பற்றி கூறியுள்ளதாவது,
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 6 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலையில் தற்போதும் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருகின்றேன்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு மூலம் முறைப்படி கடிதம் வழங்கப்பட்டு தரிசனத்திற்காக வந்தேன்.
வெளி மாநில அமைச்சர் வரும் பட்சத்தில் அம்மாநில அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் எனக்கு ஆந்திர மாநில போலீசார் யாரும் வரவில்லை. தரிசனத்திற்காக முன்னுரிமை அளிக்காமல் எல். 2 தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கினார்கள்.
நள்ளிரவு 1 மணி வரை தமிழக அமைச்சர் என்று தெரிந்தும் அலைகழிப்பு செய்தனர்.
நள்ளிரவு யாரும் இல்லாத நிலையில் நடுரோட்டில் எனது உதவியாளருடன் இருந்தேன். என் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது கடத்தி செல்லவோ முயன்று இருந்தால் அதை சுலபமாக செய்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருந்தது.
அமைச்சரான எனக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பின்னர் என்னுடன் வந்த 6 பேருக்கு மட்டும் எல்.1 தரிசனம் வழங்கி மற்ற 3 பேருக்கு சாதாரண வரிசையிலான எல். 3 தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் எந்தவித முன்னுரிமையும் இல்லாதவர்கள் 1000 பேருக்கு மேல் எல்.1 தரிசனத்தில் வந்துள்ளனர். தேவஸ்தான அதிகாரிகள் என்னை மட்டும் அல்லாமல் தமிழக அரசை அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இந்த செயல் மிகவும் கண்டிக்கதக்கது. தமிழகத்தில் அண்டை மாநில அமைச்சர்கள் வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.