ராஜபக்சே குடும்ப கதி.. திமுகவுக்கும் துணைபோகும் விசிகவுக்கும் எச்சரிக்கை.. திருமாவளவனுக்கு பாஜக பதிலடி!

By Asianet TamilFirst Published Jul 10, 2022, 9:44 PM IST
Highlights

இலங்கை விவகாரம் திமுகவுக்கும் அதற்கு துணை போகும் விசிகவுக்குமே எச்சரிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை மீறியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனையடுத்து தலைநகர் கொழும்புவில் ராணுவம் மற்றும் காவல்துறை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே இலங்கையில் ஊரடங்கை மீறியும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  இதனையடுத்து அதிபர் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.  

இதையும் படிங்க: Sri lanka : கோத்தபய ராஜபக்ச எங்கிருக்கிறார்? வெளியே கசிந்த தகவல்.!

இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடைந்து ராஜபக்சே குடும்பத்தினர் குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில், ஈழப் போரை நினைவுப்படுத்தி தமிழகத்தில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மதம், இனத்தை வைத்து ஆட்சி செய்த ராஜபக்சே குடும்பத்துக்கு ஏற்பட்ட அதே கதி இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் என்று பாஜக எதிர்ப்பாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு பதிலடியாக ராஜபக்சே குடும்ப ஆட்சிக்கு இலங்கை மக்கள் முற்றுப்புள்ளி வைத்ததைப் போல தமிழகத்திலும் நடக்கும் என்று பாஜகவினர் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இலங்கை நிலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சமூக ஊடகப் பக்கங்களில் ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: இலங்கை அதிபர் மாளிகையில் ரகசிய அறை - வைரலாகும் புகைப்படங்கள்..!

அந்தப் பதிவில், “ஒரே இனம் ஒரே மதம். ஒரே கலாச்சாரம் ஒரே தேசம்  எனும் இனவாதம் இனவெறுப்பாகி இனவெறுப்பு இனவெறியாகி இனவெறி இனக்கொலையாகி, இனக்கொலை  ஃபாசிசமாகி, ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே  பூகம்பமாகத் திரும்பி, சிங்கள பௌத்த பேரினவாத ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது. சங்பரிவார்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.” என்று திருமாவவன் பதிவிட்டிருந்தார். திருமாவளவனின் இந்தப் பதிவுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவருடைய சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹிந்து மத வெறுப்பு, ஹிந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் எண்ணம், பிரிவினைவாத போக்கு, சாதிய வெறி, வன்முறை,  குடும்ப அரசியலின் மூலம் அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை  செய்யும் தி மு கவிற்கும், அதற்கு துணை போகும் வி சி க விற்குமே எச்சரிக்கை. உஷார்!” என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கும் இலங்கை மக்கள்.. சங்பரிவார்களுக்கு ஒரு எச்சரிக்கை.. திருமாவளவன் திகுதிகு.!

click me!