
சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகின்றது. இந்நிலையில் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்லூரியில் முன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று தினங்களாக சென்னை, தமிழகத்தின் பிற பகுதிகள், பெங்களூர் ஆகிய இடங்களில் சசிகலாவின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அவற்றின் மதிப்பு இப்போது குறிப்பிட்டுச் சொல்ல இயலது என்றும், மதிப்பிடப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினர் வீடுகள், அவருக்கு நெருங்கிய நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள் தொடர்புடைய ஊழியர்களின் வீடுகள், நிறுவனங்கள், கல்லூரிகள், வங்கிக் கணக்குகள் என்று அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான அந்த செங்கமலத்தாயார் பெண்கள் கல்வி நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக, அந்தக் கல்லூரியிலுள்ள ஹாஸ்டல் அறையில் சில அலாமாரிகள் சந்தேகத்துக்குரியவை என தெரிய வந்ததாம். அதை அடுத்து அந்த அலமாரிகளில் சோதனை செய்து பார்த்ததில் வைரங்கள் மற்றும் சுவிஸ் வாட்ச்சுகள் என பலவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியில் மேற்கொண்ட இந்த சோதனையின் போது, கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் பயன்படுத்தப்படாத பெண்கள் அறைகளில் இருந்து வைரங்கள், தங்கம், ஆவணங்கள் என பலவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனை குறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த போது, ‘’கணக்கில் வராத ரூ. 6 கோடி பணம், ரூ. 2.4 கோடி மதிப்பிலான 8.5 கிலோ தங்கம், முதலீடு செய்ததற்கான ரூ. 1,200 கோடி மதிப்பிலான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரங்கள், ரோலக்ஸ் வாட்ச், சுவிஸ் வாட்ச் ஆகியவை இருந்தன. அவற்றின் மதிப்பை கணக்கிட்டு வருகிறோம். இந்த இடத்திற்கு செல்லும்போது திவாகரனின் ஆதரவாளர்கள் எங்களைத் தடுத்ததால், எங்களுக்கு சந்தேகம் வந்து நாங்கள் அந்த இடத்துக்குச் சென்றோம்’’ என்றார்.
இது மன்னார்குடி குடும்பத்துக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.