
குஜராத் மாநிலத் தேர்தல் குறித்து அந்த மாநில காங்கிரஸ் ஊடக அணியிருடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இரு கட்ட தேர்தல்
குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி மாதம் முடிய உள்ளது. இதையடுத்து, குஜராத் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்த தேர்தல் அணையம் அறிவித்துள்ளது.
பிரசாரம் தீவிரம்
தொடர்ந்து 3-வதுமுறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா கட்சி, 4-வது முறையாக ஆட்சியைப்பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு ஏற்றார்போல், காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி, புதிய யுத்தியில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பிரசாரம் செய்து வருகிறது.
ஆலோசனை
இந்நிலையில், அம்பாஜி நகரில் மாநில ஊடகம் மற்றும் ஐ.டி.பிரிவினருடன் ராகுல் காந்தி நேற்று கலந்தாய்வு நடத்தினார். அப்போது மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காங்கிரஸ் ஊடக பிரிவினரையும், தகவல்தொழில் நுட்ப பிரிவினரையும் வெகுவாக ராகுல்காந்தி பாராட்டிப் பேசினார்.
தவிர்த்துவிடுங்கள்
அப்போது குஜராத் தேர்தல் பொறுப்பாளர் அசோக் கெலாட் பேசுகையில், “ ‘குஜராத் வளர்ச்சி எங்கு இருக்கிறது’ என்ற நம்முடைய பிரசாரம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த பிரசாரதைப் பாரத்த ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகத்தை குறித்த நம்முடைய பிரசாரத்தை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள். பிரதமர் அலுவலகத்துக்கு என தனிமரியாதை இருக்கிறது. அதை நாம் மதிப்பது அவசியம் என்று என்னிடம் கூறினார்’’ என்றார்.
மதிக்க வேண்டும்
இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “ நான் அசோக் கெலாட்டுக்கு மின்அஞ்சல் அனுப்பியது உண்மைதான். நரேந்திர மோடியின் தவறுகளைக் கண்டுபிடிப்போம், பா.ஜனதாவுக்கு தொந்தரவு கொடுப்போம். ஆனால், பிரதமர் அலுவலகத்தை மதிக்க வேண்டும்.
அடுத்து ஒருவேளை மோடி அவர்கள் எதிர்க்கட்சி வரிசைக்கு வந்தால், அவர் நம்மை இதுபோல் பேசி, மரியாதை குறைவாக நடத்தலாம். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு. நாம் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால்செல்லக்கூடாது’’ என்றார்.