
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் வெற்றி அந்த கட்சிக்கு மட்டும் ஜாக்பாட் அல்ல, மாநில காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர்சிங்குக்கு 75-வது பிறந்தநாள் பரிசாகவும் அமையும்.
கேப்டன் அமரீந்தர்சிங்கு இன்று தனது 75-வது பிறந்தாளை தேர்தல் வெற்றியுடன் கொண்டாட உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிரோன்மணி அகாலிதளம்-பாரதியஜனதா கட்சி அங்கு ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது.
இந்தநிலையில், இந்த முறை ஆட்சியைக் மீட்க வேண்டிய முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும், புதிதாக ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி பிரசாரத்தில் தீவிரம் காட்டின.
இதனால் மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம்-பாரதியஜனதா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது.
சிரோன்மணிஅகாலிதளம், பாரதியஜனதா கூட்டணி ஆட்சியின் மோசமான நிர்வாகம், இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, ஊழல் ஆகியவற்றால் மக்கள் வெறுத்து தேர்தலில் அந்த கூட்டணிக்கு சரியான பாடத்தை புகட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் மாநிலத்தில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. ஆளும் சிரோன்மணிஅகாலிதளம், பாரதியஜனதா கூட்டணி 17 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கேப்டன் அமரீந்தர்சிங் பாட்டியாலா, லம்பி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் லம்பி தொகுதி முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, பாட்டியாலா என்பது அமரீந்தர் சிங்குக்கு கோட்டையாகும். இதில் அவரின் வெற்றி என்பது ஏறக்குறைய உறுதியாகி வருகிறது.
இன்று மாலை தேர்தல் முடிவு தெரியவந்தபின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு இரு பரிசு கிடைக்கப்போகிறது.
ஒன்று அந்த கட்சி 10 ஆண்டுகளுக்கு பின் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும், இரண்டாவது, இந்த வெற்றி 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாட உள்ள அமரீந்தர்சிங்குக்கு மறக்க முடியாத பரிசாக அமையும். அடுத்த முதல்வராக அமரீந்தர் சிங்கே பொறுப்பு ஏற்பார் எனத் தெரிகிறது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 54 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கமுடியும் என்ற சூழலில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களில் பெரும்பான்மையுடன் தனிமுன்னிலை பெற்று வருகிறது.