புதுச்சேரியின் சூப்பர் முதல்வர் தமிழிசை... ரங்கசாமி தலையாட்டி முதல்வர்... கொதிக்கும் மாஜி முதல்வர்.!

By Asianet TamilFirst Published Oct 5, 2021, 10:39 PM IST
Highlights

புதுச்சேரியின் சூப்பர் முதல்வர் யார் என்றால், அது ஆளுநர் தமிழிசைதான். அவர் என்ன சொன்னாலும் முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையைப் போல் செயல்படுவார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

புதுச்சேரியில்  நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, “தற்போது புதுச்சேரியின் சூப்பர் முதல்வர் யார் என்றால், அது ஆளுநர் தமிழிசைதான். அவர் என்ன சொன்னாலும் முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையைப் போல் செயல்படுவார். காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு எடுத்த முடிவையே செயல்படுத்தினோம். இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கும், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிதான் நம்பர் 1 கட்சி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. யாராவது நாங்கள்தான் நம்பர் 1 கட்சி என்றால், அந்தக் கூட்டணிக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு வார்டு ஒதுக்கீடு மறுஆய்வு செய்ய உள்ளதால் தற்போது தேர்தல் இல்லை என்று புதுச்சேரி அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவுக்கு ஆளத் தகுதியில்லை. அந்தக் கூட்டணிக்கு நிர்வாகம் செய்யவும் தெரியவில்லை என்பது தெளிவாகிறது” என்று நாராயணசாமி தெரிவித்தார்.


முன்னதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், புதுச்சேரி பொறுப்பாளருமான நடிகை நக்மா  பேசுகையில், “புதுச்சேரியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகளிர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறைவு. எனவே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு பெண்கள் போட்டியிட கட்சி வாய்ப்பளிக்க வேண்டும். கட்சியைப் பலப்படுத்தி இந்த உள்ளாட்சித் தேர்தலிலும், 2024-ஆம் ஆண்டில் வரும்  நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும்” என்று நக்மா தெரிவித்தார். 

click me!