
கடலூர் மாவட்டம் புவனகிரியில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமான படுகொலை உத்திரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் இறந்துள்ளனர். ஆங்கிலேய அரசுகூட படுகொலைக்குப் பின் பஞ்சாப் செல்ல தலைவர்களை அனுமதித்தது. ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் கைது செய்திருக்கிறார்கள்.
அதுபோல சட்டீஸ்கர் மாநில முதல்வர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தபட்டிருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. நாடு முழுவதுமே விவசாயிகளும் பொதுமக்களும் மோடி அரசின் உன்மையான முகத்தைப் புரிந்து வைத்துள்ளனர். இதனால், மோடி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றவர்கள் நாம். எனவே, விரைவில் மோடியையும் வெற்றி பெறுவோம்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.