
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து, பல்வேறு இழுபறிகளுக்கு இடையே அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் பாஜகவை சேர்ந்த செல்வம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 4-ம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை வந்தார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரை புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சபாநாயகர் செல்வம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சூழலில் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. சபைக் காவலர்களே மருத்துவமனை வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.