நெருக்கடியில் மத்திய அரசு…..முதலில் ரிசர்வ் வங்கி….அடுத்து பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் குறிவைப்பு ....

By Selvanayagam PFirst Published Jan 16, 2020, 8:37 PM IST
Highlights

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ரூ.19 ஆயிரம் கோடியை ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) தரும்படி மத்திய நிதியமைச்சகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., பி.பி.சி.எல்., இந்தியன் ஆயில், கெயில், ஆயில் இந்தியா மற்றும் என்ஜினீயர்ஸ் இந்தியா ஆகியவை தங்களது லாபத்தில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்குகின்றன. 

இந்த நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்ட் மத்திய அரசுக்கு பெரிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிதியாண்டில் மத்திய அரசின் வருவாய் நிலவரம் மோசமாக உள்ளது. பெரிய அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனை ஈடுசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சமீபத்தில் ரூ.45 ஆயிரம் கோடி வரை இடைக்கால டிவிடெண்டாக தரும்படி ரிசர்வ் வங்கியிடம் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.இந்த சூழ்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களிடம் சுமார் ரூ.19 ஆயிரம் கோடி டிவிடெண்டாக தரும்படி மத்திய நிதியமைச்சகம் கேட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறைந்துள்ள போதிலும், சென்ற நிதியாண்டைக் காட்டிலும் கூடுதலாக 5 சதவீதம் டிவிடெண்ட் தரும்படி மத்திய  அரசு வலியுறுத்தி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசு கேட்கும் டிவிடெண்ட்

ஓ.என்.ஜி.சி.                                      ரூ.6,500 கோடி
இந்தியன் ஆயில்                            ரூ.5,500 கோடி
பி.பி.சி.எல்.                                        ரூ.2,500 கோடி
கெயில்                                               ரூ.2,000 கோடி
ஆயில் இந்தியா                              ரூ.1,500 கோடி
என்ஜினீயர்ஸ் இந்தியா               ரூ.1,000 கோடி

மொத்தம்                                            ரூ.19,000 கோடி

 

click me!