இனி ஆண்டுதோறும் சொத்து வரி விர்ர்ர்... மக்கள் பணியாற்றவே புதிய சட்டம்.. விலாவரியாக விளக்கும் கே.என். நேரு!

By Asianet TamilFirst Published May 13, 2022, 9:08 AM IST
Highlights

குடிநீர் இணைப்பு, மார்க்கெட், பேருந்து நிலையம், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள்.  அரசு ஒதுக்கும் நிதியைவிட நகராட்சி நிர்வாகமே தங்களுடைய சொந்த செலவில் இந்தப் பணிகளை செய்யதான் வரி உயர்வு. 

இனி 10  - 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்த்துவது ஏற்புடையது அல்ல என்பதால்தான்  அந்தந்த பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆண்டுதோறும் வரி நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்று தமிழக நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் புதிய சொத்து வரி சட்டம் கொண்டு வந்ததற்கு காரணமே பணி நிரவல்தான். நிர்வாகம் காரணமாக வரி உயர்த்தவோ வரி மேல்முறையீடோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே முடிவு செய்ய இந்தச் சட்டம் வழி செய்கிறது. தமிழகத்தில் 53 சதவீத இடங்கள் நகராட்சி துறையின் எல்லையில் வருகின்றன. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆண்டு தோறும் சாலை அமைத்தல், கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால், பூங்காக்கள், விளையாட்டு மைதானம் அமைப்பது உள்ளிட்ட புதிய பணிகளை செய்ய வேண்டியுள்ளது. சிலர் சொத்து வரிகளை செலுத்தாமலே இருந்து வருகிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான திட்டங்களை செயல்படுத்ததான் வரி உயர்த்தப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் அதிமுக அரசுதான் 100 முதல் 300 சதவீதம் வரை வரியை விதித்தது. ஆனால், நாங்கள் 25 முதல் 150 சதவீதம் வரைதான் உயர்த்தியுள்ளோம். இனி 10  - 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்த்துவது ஏற்புடையது அல்ல என்பதால்தான்  அந்தந்த பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆண்டுதோறும் வரி நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

இந்த வரி உயர்வு மக்கள் பணி செய்வதற்காகத்தான். இதனால் விலை வாசி உயர்வு எல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை. குடிநீர் இணைப்பு, மார்க்கெட், பேருந்து நிலையம், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். அரசு ஒதுக்கும் நிதியைவிட நகராட்சி நிர்வாகமே தங்களுடைய சொந்த செலவில் இந்தப் பணிகளை செய்யதான் வரி உயர்வு. இதனால் விலைவாசி அதிகரிக்கவில்லை. சென்னையில் 1,800 சதுர அடி வீட்டுக்கு ரூ. 6,250  வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதே அளவு வீடுக்கு ரூ. 88 ஆயிரம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே சொத்து வரி மிக குறைவாக உள்ள மாநிலம் தமிழகம்தான்.” என்று கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

click me!