வாக்கு எண்ணிக்கை மையங்களில் ப்ராக்டிகல் தேர்வு.. ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது.. திமுக பரபரப்பு புகார்

By vinoth kumarFirst Published Apr 16, 2021, 1:23 PM IST
Highlights

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாட்டம் இருக்கிறது என திமுக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாட்டம் இருக்கிறது என திமுக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் சாகுவை சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்முடி;- வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து எங்கள் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கைகள் வைத்திருக்கிறார். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல விதிமீறல்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக நான் போட்டியிடும் திருக்கோவிலூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று பிளஸ் டு பிராக்டிகல் தேர்வே நடைபெறுகிறது. 147 பேர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் இருக்கிறார்கள். இது எனக்கு இன்று காலை முகவர் மூலமாக தெரியவந்தது. உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் பேசினேன். அதன் பிறகு அங்கிருந்து அவர்களை எல்லாம் வெளியே அனுப்பச் சொல்லியிருக்கிறார். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது? தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மையம் (கேம்பஸ்) ஒருமுறை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டால் அதில் தேர்தல் ஆணையரைத் தவிர யாரும் நுழையக் கூடாது என்பது சட்டம். ஆனால் இதையெல்லாம் மீறுவது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இவை பரவலாக நடக்கின்றன என்றார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் சந்தேகப்பட்டுதான் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினோம். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மார்ச் 23 ஆம் தேதியன்று கண்டிப்பான சில உத்தரவுகளைப் பிறப்பித்து அவற்றின்படி நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் அவற்றின்படி தேர்தல் ஆணையம் நடக்கவில்லை. இன்னும் 15 நாட்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தேர்தல் ஆணையம் மீது தொடருவேன் என்று கூறியுள்ளார். மேலும்,  வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்கள் நடமாட்டத்தால் ஆணையம் மீது நம்பிக்கை குறைகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

click me!