
அப்படியாக முறைகேடு செய்தவர்களிடம் நடத்தப்படும் சோதனை எந்தவகையில் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்க முடியும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது பாமர மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும் என்றார். மேலும் வரிகுறைப்பு குறித்து விளக்கமளித்தார்.
மீனவர்களின் வலைக்கு விதிக்கப்பட்ட வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரப்பர் பொருட்கள், கோவை மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்கும் வெட் கிரைண்டர், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிகுறைப்பு பாமர மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சிறு, குறு வணிகர்கள் முதல் பெரு வியாபாரிகள் வரை அனைத்து தரப்பினரும் இன்னும் சில மாதங்களில் ஜிஎஸ்டியின் அவசியம் குறித்து உணர்ந்து பாராட்டுவர் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்துவரும் சோதனை குறித்தும் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக செய்திகள் வெளியாகின்றன. கோடிக்கணக்கில் ஏமாற்றியவர்களிடம் நடத்தப்படும் வருமான வரி சோதனை எப்படி அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்க முடியும்? மற்ற மாநிலங்களிலும் பாஜக தலைவர்களின் வீடுகளில் கூட வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு. வருமான வரி வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். எனவே அதற்குள் வருமான அதனால் நிலுவையில் உள்ள வழக்குகளை அந்த காலத்திற்குள் முடிப்பார்கள். அதுதொடர்பாக அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.