
பிரமதர் மோடி, அருண் ஜெட்லியிடம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் ...கோவா மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்ணயம் செய்த, மிக அதிகபட்சமான ஜி.எஸ்.டி. வரியால் மத்திய அரசுக்கும், மாநில அரசுளுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. தானாக முன்வந்து, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வர்த்தகத்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாயக் வலியுறுத்தியுள்ளார்.
கோவா மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்றத்தின் பணியாளர், சட்டம், குறைகேட்பு நிலைக்குழுத் தலைவரான சாந்தாராம் நாயக் நிருபர்களிடம் பானாஜி நகரில் நேற்று கூறியதாவது-
ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜி.எஸ்.டி. வரியை அதிகபட்சமாக நிர்ணயித்தது குறித்து சி.பி.ஐ. தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும். அதிகபட்சமான வரியால் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் தோராயமாக ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்புக்கு பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா ஆகியோர்தான் பொறுப்பாவார்கள். இவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வளவு பெரிய இழப்பை தேசத்துக்கு மோடி ஏற்படுத்திவிட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுமீது பழி சுமத்துகிறார்.
ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு என்பது தோராயமானதுதான். ஆனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்திய இழப்பு மிகவும் அதிகம். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தும், பொய்யான பொருளாதார விவரங்களைக் கொடுத்தும், மிகப்பெரிய முடிவுகளை எடுத்துள்ளார். அனைத்துக்கும் மோடி பொறுப்பு ஏற்க வேண்டும்.
சரக்கு மற்றும்சேவை வரி என்பது, சிறு வர்த்தகர்கள், சாமானிய மக்கள் மீது ஏவப்பட்ட பொருளாதார தீவிரவாதமாகும். இவர்களின் கடினமான நடவடிக்கையால், பொருளாதாரத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.