போலீசார் தாக்கப்பட்ட விவகாரம்! சீமானிடம் விசாரிக்க திட்டம்...! 

First Published Apr 12, 2018, 4:34 PM IST
Highlights
Police attacked Planning to inquire about Seeman ...!


ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் தாக்கப்பட்டது குறித்து சீமானிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் அதிரடிப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது.

போராட்டம் நடைபெற்று வருவதால், ஐபிஎல் போட்டியை வேறிடத்துக்கு மாற்ற போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஐபிஎல் நிர்வாகமே சென்னையில் திட்மிட்டபடி அந்தந்த தேதிகளில் நடக்கும் என்று கூறியது.

இதையடுத்து, கடந்த 10 ஆம் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைக் கண்டித்து அண்ணா சாலையில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பாரதிராஜா வைரமுத்து, தங்கர்பச்சான் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் ஈடுபட்டன.

அப்போது, காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீஸ்சாரை போராட்டக்காரர்கள் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சீமான் உள்பட 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 10 வழக்குகள் போடப்பட்டன.

இந்த நிலையில், தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரால் கைதும் செய்யப்பட்டனர்.

சென்னையில் போராட்டம் நடத்திய சீமானையும் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சீமானிடம் போலீசார் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு அதி விரைவு பாதுகாப்பு படை சீமானிடம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா மண்டபத்தைச் சுற்றி அதிரடிப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டர் பதிவொன்றில், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் என்று வன்முறையை தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல என்றும், வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திருமுருகன் காந்தி, திருமாவளவன் அனைவருமே என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

click me!