பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் சாபக்கேடு என்றும் நிலையான கொள்கை இல்லாத அந்த கட்சி தமிழகத்தில் இருக்கக் கூடாது என்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரி வேந்தர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஜனநாயக் கட்சியின் நிறுவனரும், எஸ்ஆர்எம் கல்லூரியின் வேந்தருமான பாரிவேந்தர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாமக மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் சாபக்கேடு என்றும், நிலையான கொள்கை இல்லாத அந்தக் கட்சியை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் பெரிது படுத்தி ஒரு மாயையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இருக்கக்கூடாத ஒரு கட்சி பாமக என்றும், அதன் தலைவர் ராமதாஸ் அறிக்கைவிட்டே பிழைப்பு நடத்துவதாகவும் பாரிவேந்தர் கூறினார்.
அன்புமணி அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்ததாக கவர்னரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அவர் எப்படிப்பவர் என்று மருத்துவக் கல்லூரி வைத்துள்ளவர்களுக்கு தெரியும் என பாரிவேந்தர் குறிப்பிட்டார்.
மருத்துவக் கல்லூரி உரிமையாளக்ளிடம் அன்புமணி கோடிக்கணக்கில் மிரட்டி பணம் பறித்தார் என பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது பிழிந்து, பிழிந்து லஞ்சம் வாங்கினார் என்றும் மனசாட்சியே இல்லாத கட்சி பாமக என்றும் பாரிவேந்தர் தெரிவித்தார்.
தனது மருத்துக் கல்லூரியில் இடம் ஒதுக்குவது தொடர்பாக மதன் என்பவர் கைது செய்யப்பட்டபோது அவரை தூண்டிவிட்டு என்னை கைது செய்ய வைத்தது பாமகவின் ராமதாசும், அன்புமணியும்தான் என்றும் பாரி வேந்தர் குற்றம் சாட்டினார்.
திடீரென தனது அலுவலகத்துக்கு வரும் பாமகவினர் பணம் கேட்டு மிரட்டுவார்கள் கொடுக்கவில்லை என்றால் சொத்துக்களை சேதப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். பாமகவால் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும் பாரி வேந்தர் அதிரடியாக குற்றம்சாட்டினார்.