நீங்க என்ன ஆம்பளை ஜெயலலிதாவா ?  உங்க ஆடம்பரத்துக்கு அளவே இல்லையா ? எடப்பாடியை வாட்டி எடுத்த ராமதாஸ் !! 

First Published Jul 3, 2018, 11:58 AM IST
Highlights
PMK Ramadoss statement about new bus route opening function


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கெத்து காட்டுவதந்காக   புதிதாக  வாங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளையும் சென்னை கொண்டு, இங்கிருந்து இயக்க  வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள பாமக ராமதாஸ், முதல்வரின் ஆடம்பரத்துக்காக போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இயக்கி வைத்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது.

விழா நடைபெறும் இடத்தில் அதிகபட்சமாக 5 பேருந்துகளைக் கூட நிறுத்த முடியாது. இதற்காக சென்னையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பேருந்துகளை மட்டும் வைத்து இந்த விழாவை சிறப்பாகவும்,  நிறைவாகவும் நடத்த முடியும்.

ஆனால், தம்மை ஆண் ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டிருக்கும் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீண் பகட்டு காட்டுவதற்காகவே தமிழகம் முழுவதிலும் இருந்து புதிய அரசுப் பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு புதிய பேருந்தும் சென்னைக்கு வந்து செல்வதற்காக குறைந்தது 400 கிலோ மீட்டர் முதல் 1500 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு வருவதற்கு பதிலாக அவை அவற்றுக்குரிய வழித்தடங்களில் இயக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் இரு நாட்களில் ரூ.30,000 வரை வருவாய் ஈட்டியிருக்கக்கூடும்.

ஆனால், வழித்தடங்களில் இயக்கப்படாமல் வீணாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் வீணாக அவற்றின் பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால்  அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இரு நாட்களில் மட்டும் குறைந்தப்பட்சம் ரூ.1.63 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்காக ஒவ்வொரு பேருந்தையும் அலங்காரம் செய்வதற்காக மட்டும் தலா ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.27.10 லட்சம் வீண் செலவு ஏற்படும். தொடக்க விழாவுக்காக சென்னைக்கு கொண்டு வரப்படும் புதிய பேருந்துகளை முதல்வரோ, அதிகாரிகளோ பார்வையிடக்கூட போவதில்லை. விழா முடிந்து பணிமனைக்கு திரும்பும் போது கூட அவற்றில் பயணிகள் அனுமதிக்கப்படப் போவதில்லை. இவ்வாறு எந்த தேவையும், பயனுமின்றி முதலமைச்சரின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அரசு வளம் வீணடிக்கப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது ஒன்றுக்கும் உதவாத முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 515பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொண்டு, இன்னொரு புறம் ஆடம்பரத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் வாரிசான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் தண்டிக்கும் காலம் தொலைவில் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!