
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே தமிழகத்துக்கு மாஸ் வெற்றி கிடைத்திருப்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழக அரசு நடத்திய சட்டப் போராட்டத்தின் காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் 4 மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர் நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி பின்னர்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று அம்மந்ல முதலமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது, காலை 11 மணியளவில் இந்த கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக அரசு சார்பில் தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். புதுச்சேரியின் சார்பில் அந்த மாநில பொதுப் பணித்துறை செயலாளர் அன்பரசு கூட்டத்தில் பங்கேற்றார்.
இதேபோல் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றிருந்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஆணையத்தின் வரவு-செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஜுலை மாதத்துக்கான தமிழத்துக்குரிய 31.24 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் முதல் கூட்டத்தில் தற்போது முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்சநிதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் ஆணையம் வலிறுத்தியுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக காவிரி விவகாரத்தில் தமிழகம் மத்திய மற்றும் கர்நாடக அரசுகளால் வஞ்சிக்கப்பட்டு வந்த நிலையில் தமிக மக்களுக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.