பம்பரமாக சுழலும் ராமதாஸ்... ஒதுங்கி நிற்கும் அன்புமணி... ஐயா - சின்னைய்யா இடையே மீண்டும் மனஸ்தாபம்..!

By Selva KathirFirst Published Mar 22, 2019, 9:44 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் பம்பரமாக சுழன்று வரும் நிலையில் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் பம்பரமாக சுழன்று வரும் நிலையில் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார்.

வேட்பாளர் பட்டியலை அறிவித்து மறுநிமிடமே ராமதாஸ் தேர்தல் பணிகளை துவங்கினார். முதல் வேலையாக விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்திய ராமதாஸ் அங்கு திருமாவளவனுக்கு எதிராக அதிரடி கருத்துக்களை கூறி அரசியல் அரங்கை சூடாக்கினார். விழுப்புரத்தில் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து மிகச்சிறப்பாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து அதோடு அல்லாமல் தேர்தலுக்கான பணிகளையும் விலாவாரியாக எடுத்துரைத்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார் ராமதாஸ். இதனால் பாமக நிர்வாகிகள் விழுப்புரத்தில் படுவேகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். 

விழுப்புரத்தை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் மத்திய சென்னை என வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை மின்னல் வேகத்தில் நடத்தி வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அனைத்து ஆலோசனைக் கூட்டத்திலும் ராமதாஸ் பேச்சில் அனல் தெறிக்கிறது. தொண்டர்களை உசுப்பேற்றும் வகையிலும் சூடேற்றும் வகையிலும் அவர் பேசுவது தேர்தல் பணிகளில் எதிரொலிக்கிறது. ராமதாஸ் வந்து சென்ற பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள பாமக நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களில் பாமகவின் முகமாக இருந்த அன்புமணி ராமதாஸ் தற்போது வரை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகவில்லை. தந்தை ராமதாஸ் எட்டடி பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் மகன் அன்புமணியும் பதினாறடி பாய வேண்டும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அன்புமணியும் தற்போது வரை தனது பிரசார திட்டத்தை கூட வெளியிடாமல் அமைதியாக இருக்கிறார்.

 

கடந்த தேர்தலில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் முன்நின்று நடத்தி முடித்தார். ஆனால் இந்த முறை வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை தான் பார்த்துக் கொள்வதாக ராமதாஸ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் செலவு தொடர்பான விவகாரங்களையும் ராமதாஸ் நேரடியாக தன்னுடைய மேற்பார்வையில் வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று ராமதாஸ் சொல்லிவிட்டதாகவும் பரவலான பேச்சு இருக்கிறது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அதன் காரணமாகவே அன்புமணி ராமதாஸ் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள். கடந்த இரண்டு தேர்தல்களிலும் அன்புமணி ராமதாஸ் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால் இந்த முறை ராமதாசை நேரடியாக களம் இறங்கி விட்டதாக பாமகவினர் பேசி வருவதால் அந்த தகவலை கேட்டு அன்புமணி மிகவும் அவர்கள் இருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள். 

ராமதாஸ் அன்புமணி இடையிலான மனஸ்தாபம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தற்போது பிரச்சாரம் வரை வந்துள்ளது. இது மேலும் இடிக்கக் கூடாது என்று பாமக தொண்டர்கள் விரும்புகின்றனர். எனவே இந்தப் பிரச்சனையை தீர்த்து மீண்டும் அன்புமணி ராமதாஸ் களமிறங்க வேண்டும் என்று ஜிகே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் இரு தரப்புக்கும் இடையே சமாதானம் பேசி வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

click me!