தூத்துக்குடி மக்களை பாராட்டிய பிரதமர் மோடி.. இந்த செயலால் நெகழ்ந்து போன பிரதமர்..!

Published : Nov 28, 2021, 03:42 PM ISTUpdated : Nov 28, 2021, 03:43 PM IST
தூத்துக்குடி மக்களை பாராட்டிய பிரதமர் மோடி.. இந்த செயலால் நெகழ்ந்து போன பிரதமர்..!

சுருக்கம்

கடல் தீவுகளை பேணுவதற்கு , பனை மரங்களை தொடர்ந்து நட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட மக்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும் புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் பனைமரங்களை நடுவது பாராட்டத்தக்கது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  

பிரதமர் மோடி இன்று தனது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது தூத்துக்குடி மக்களுக்கு மோடி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இயற்கையை நாம் பாதுகாக்கும்போது அதற்கு ஈடாக இயற்கை நமக்கு வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும் என்றார்.

நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் என்றும் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும் என்றும் கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் எனவும் தூத்துக்குடியில் உள்ள சிறிய தீவுகள், திட்டுக்கள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகிறார்கள் எனவும் கூறினார். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்துக்கு பனைமரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எனவே, பனை மரங்களை நடுவது பாராட்டத்தக்கது என்று கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் ஜலானில் நூன் நதி எனும் நதி படிப்படியாக அழிவின் விளிம்புக்கு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்து, நதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நூன் நதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அந்த நதிக்கு ஜலான் மக்கள் புத்துயிர் அளித்துள்ளனர் என்று பாராட்டினார். அரசாங்கத்தின் முயற்சியால், அரசின் திட்டங்கள் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றியது, என்பதை கேட்கும்போது மனதிற்கு திருப்தி தருவதோடு அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான உத்வேகத்தையும் அளிக்கிறது. இதைத்தான் நான் வாழ்க்கையில் தேடுகிறேன். ஆட்சி, அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள் என்று கூறினார்.

மேலும் அவர். எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர விரும்பவில்லை எனவும் நான் சேவையில் இருக்க வேண்டும். எனக்கு இந்த பிரதமர் பதவி அதிகாரத்துக்காக அல்ல. சேவைக்காகவே இருக்கிறேன் என்று கூறினார். மேலும், டெல்லியில் சமீபத்தில் நடந்த குழந்தைகள் பேச்சு நிகழ்ச்சியில், சுதந்திர போராட்டம் தொடர்பான கதைகளை குழந்தைகள் வழங்கினர். இதில் இந்தியாவுடன் நேபாளம், மொரீசியஸ், தான்சானியா, நியூசிலாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளை சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்று அவர்களின் படைப்பாற்றலையும், இந்தியாவின் வரலாற்றையும் மிக திறம்பட வெளிப்படுத்தி அழகான கவிதைகளை அளித்தனர். இது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது என்று கூறினார்.

 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் பொன்விழா ஆண்டை டிசம்பர் 16-ந்தேதி கொண்டாடவுள்ளோம். இந்நேரத்தில், நாட்டின் பாதுகாப்பு படையினரையும், இராணுவ வீரர்களையும் நினைவு கூறுகிறேன். அதே போன்று டிசம்பர் 6-ந் தேதி பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாள் . அவர் தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும், சமுதாயத்துக்காகவும், கடமைகளை ஆற்றுவதற்காகவும் அர்ப்பணித்தவர் என புகழாரம் சூட்டினார். கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் மக்கள் நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அனைவரின் கடமை எனவும் அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!
கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!