PM Modi: குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது.... போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி

By Ganesh PerumalFirst Published Nov 26, 2021, 7:28 PM IST
Highlights

குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 71-வது இந்திய அரசியலமைப்பு தினமான இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: “பல தலைவர்கள் தங்கள் சிந்தனையால் இந்திய அரசியலமைப்பை உருவாக்கி உள்ளார்கள். அவர்களை நாம் இன்று நினைவு கூற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை அரசியலமைப்பு தான் ஒன்றிணைக்கிறது. 

அதேபோல் இந்திய அரசியலமைப்பு தான் நமது மாநிலங்களை இணைக்கிறது. பல தடைகளுக்கும், போராட்டங்களுக்கும் பின்புதான் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழல் செய்து தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது.

அரசியல் கட்சிகள் ஜனநாயகத் தன்மையை இழக்கும்போது அரசியல் சாசன உணர்வு பாதிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியல் நடத்துகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. 

அதேபோல், குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வராதீர்கள். குடும்ப அரசியலை செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்துவிட்டன. குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

click me!