தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது அதே சாலையின் எதிரே கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பேருந்து சுக்குநூறாக நொறுங்கி அதில் பயணம் செய்த பயணிகள் 13 ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உடலுறுப்புகளை இழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கோரவிபத்து இரு மாநில மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணியில் தமிழக, கேரள அரசுகள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், "தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறுவார்கள் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடியின் சார்பாக பதிவிடப்பட்டுள்ளது.