ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அதிமுகவினர் வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை திட்டமிட்டு நிராகரிப்பதாக எதிர் கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், ’’ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அதிமுகவினர் வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தில் பலரும் நகைகளை அடமானம் வைத்த காரணத்தினால் தான் தவறு நடந்துள்ளதாக தவறான தகவல்களை முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது’’ என அவர் குற்றம்சாட்டினார்.