வெங்கையா நாயுடுவை ஏமாற்றிய ‘மாத்திரை விளம்பரம்’...தனது அனுபவம் குறித்து மாநிலங்கள் அவையில் ‘புலம்பல்’

First Published Dec 29, 2017, 10:15 PM IST
Highlights
Pillar Advertising Cheating on Venkaiah Naidu

போலி விளம்பரங்கள் குறித்து கவலை தெரிவித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து மாநிலங்கள் அவையில் கூறி நேற்று புலம்பினார்.

மாநிலங்கள் அவையில் நேற்று நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடந்தது. அப்போது, சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால், போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் கூடுதலாக நடக்கின்றன என்று வருத்தம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, போலி விளம்பரத்தைப் பார்த்து பொருள் வாங்கியதால் தனக்கு நேர்ந்த கதி குறித்து புலம்பினார்.

அப்போது அவர் கூறுகையில், “ நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்தபின், நான் ஒருநாள் விளம்பரம் ஒன்றை காண நேர்ந்தது. அதில், உடல் எடையை மிக விரைவாகக் குறைக்கும் மாத்திரை குறித்த அந்த விளம்பரத்தை பார்த்தேன். அந்த மாத்திரைகளை சாப்பிட்டால் உறுதியாக உடல்எடை குறையும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு , மாத்திரை குறித்து விசாரித்தேன். ஆயிரம் ரூபாய் செலுத்தக் கூறினார்கள். பணம் செலுத்தினேன். 

மாத்திரைகள் எனக்கு கிடைப்பதற்கு பதிலாக, எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில், தேவைப்பட்டால் மற்றொரு மாத்திரை வாங்கிக்கொள்ளுங்கள், அதுவும் ஆயிரம் ரூபாய்தான். விரைவாக உடல் எடை குறையும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், முதல் மாத்திரையை அனுப்பினால்தான் 2-வது மாத்திரைகளுக்கு பணம் செலுத்த முடியும். என்று தெரிவித்தேன்.

அதன்பின் இந்த விளம்பரத்தின் மீது சந்தேகம் அடைந்து குறித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் புகார் செய்தேன். அவர் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் டெல்லியைச் சேர்ந்தது இல்லை, அமெரிக்காவைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.

இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றமுடியும். இதைத் தடுக்க கடுமையாக சட்டங்களும், போலியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

click me!