#BREAKING ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி ஆனால்... தமிழக அரசு பிறப்பித்துள்ள முக்கிய கன்டிஷன்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 26, 2021, 1:37 PM IST
Highlights

4 மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் பிராண வாயு உற்பத்தி அலகுகளை மட்டும் இயக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. 
 

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கான ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் வாயு உற்பத்திக்காக திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பெரும்பாலான கட்சிகள் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தன. 

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. 4 மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் பிராண வாயு உற்பத்தி அலகுகளை மட்டும் இயக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. 

1. கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். பிராண வாயுவின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

2.உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

3. பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.


4) இந்நேர்வில், தற்காலிக பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்த குழு, பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.

5) தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 

click me!