சீமானை கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன்..! அற்புதம்மாள் இல்ல திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!

By Manikandan S R SFirst Published Nov 24, 2019, 1:20 PM IST
Highlights

பேரறிவாளன் சகோதரி மகளின் திருமணம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் ஏராளனமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசு இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால் அதில் எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

இதனிடையே உடல்நலமில்லாமல் இருக்கும் தந்தையை கவனித்து கொள்வதற்காகவும் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவும்  பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 12 ம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரது சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிரு‌‌ஷ்ணகிரியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ள பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி வந்தார். இதன்காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் வீரமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர், கௌதமன், நடிகர் பொன்வண்ணன், சத்யராஜ், மூடர்கூடம் நவீன் உட்பட ஏராளமான பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

மேடைக்கு வந்த சீமானை கட்டியணைத்து பேரறிவாளன் வரவேற்றார். நடிகர் சத்யராஜ் கூறும்போது, 'இது எங்கள் குடும்ப விழா. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி' என்றார்.

click me!