டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் எங்கேயும் தப்பி செல்லவில்லை எனவும், அதர்மத்தை எதிர்க்கவே ஒன்றாகவே தங்கியுள்ளோம் எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் சிலர் தமது சொந்த ஊருக்கு தப்பி செல்வதாக செய்திகளும் பரவியது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் எங்கேயும் தப்பி செல்லவில்லை எனவும், அதர்மத்தை எதிர்க்கவே ஒன்றாகவே தங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
விரைவில் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க இருக்கிறோம் எனவும், ஸ்லீப்பர் செல்ஸ் கூட சேர்த்து 35 பேர் எங்கள் கட்சியில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் கொள்கைப்படி அரசு செயல்படவில்லை எனவும், இதுவரை நடந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதபோது இந்த கூட்டத்திற்கு மட்டும் ஏன் அழைப்பு விடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
சமரசத்திற்கு இடமில்லை எனவும் திட்டவட்டமாக வெற்றிவேல் தெரிவித்தார்.