லாக் டவுன்னா சும்மாவா..?? முகக்கவசம் அணியாமல் வந்த 3,174 பேர் மீது வழக்கு.. 6 லட்சம் ரூபாய் அபதாரம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 10, 2022, 1:18 PM IST
Highlights

வாகனம் ஓட்டியது தொடர்பாக 29 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 5 இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு இதர வாகனம் என மொத்தம் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று முழு ஊரடங்கின்போது தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி முகக் கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுளதாக சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைகிரான் தோற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 6 ஆம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இரவு நேர ஊரடங்கின்போது 312 வாகன தணிக்கைச் சாவடிகள் அமைத்து, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பகல் நேரங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்கெட் பகுதிகள், கடைத் தெருக்கள் போன்ற இடங்களில் பின்பற்றுவது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாநகரம் முழுவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீவிர கண்காணிப்பில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக 1,040 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 98 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 1,112 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள், 40 இலகுரக வாகனங்கள் மற்றும் 4 இதர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,205 வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 29 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 5 இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு இதர வாகனம் என மொத்தம் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்த ஆலோசனைகள் பெற சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள 9498181239, 9498181236, 7200706492 மற்றும் 7200701843 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளும்படியும், அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் காவல் துறையின் உதவி எண்ணான 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளும்படியும் சென்னை காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் அரசுக்கும், காவல் துறைக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் அவசரத் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்கும்படியும் சென்னை காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
 

click me!