தனியாகவே ஜெயிச்சிருப்பேன்.. போகா கூடாத இடத்திற்கு போய் விட்டேன்- ஸ்டாலினை குத்தி கிழிக்கும் பாரி வேந்தர்

By Ajmal KhanFirst Published Sep 12, 2022, 3:01 PM IST
Highlights

நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். நாங்கள் அவசரப்பட்டு விட்டோமோ என தினந்தோறும் நினைப்பதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி- பாரிவேந்தர் வேதனை

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.சத்யநாத உடையார் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இத்திருமண விழாவினை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னின்று நடத்தி வைத்தார். இவ்விழாவில்  இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர், கட்சியின் மாநில தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மணவிழாவில் 'வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்..! இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்..!' என்ற வாசகத்துடன், வாக்காளர் அடையாள அட்டையுடன்,  ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை மையத்தை மணமக்கள்  திறந்துவைத்தனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து, தலைமை பொறுப்பு நிரந்தரமானது அல்ல. பதவியில் இருப்பவர்  சமூகத்திற்கு என்ன செய்தோம் என்பதை பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும்.

தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற்றிருப்பேன்

5 முறை தலைவராக இருப்பவரால் என்ன செய்ய முடியுமோ..! அதை 2 முறை தலைவராக இருந்த சத்தியநாதன் சாதித்துள்ளதாக தெரிவித்தார். இந்த திருமண விழாவில் சங்க மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ந்த கட்சியினர் கல்யாண மேடைகளில் பேசிதான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் என கூறினார்.  சாதி இல்லை என்று சொல்லும் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ..! அந்த சாதியை சேர்ந்தவரைத்தான்  வேட்பாளராக நிறுத்துகிறார்கள் என குறிப்பிட்டார். தமிழகத்தில் மோடி மற்றும் பாஜகவினரை பிடிக்கவே பிடிக்காது ஆனால் நான்பாஜக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு  2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன்.

பதவியை ராஜினாமா செய்ய தயார்

பின்னர் திமுக கூட்டணியில் 2.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை  எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்திற்கு போய் இருக்க வேண்டாம். திமுகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக வருத்தப்படுவதாக தெரிவித்தார். நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். நாங்கள் அவசரப்பட்டு விட்டோமோ என தினந்தோறும் நினைப்பதாக கூறினார். எனவே எம்பி பதவியை எப்போது வேண்டும் என்றாலும் ராஜினாமா செய்யலாமா என நினைப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

 

click me!