தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மீது பன்னீர்செல்வம் ஆதரவாளர் தாக்குதல்..!

First Published Oct 11, 2017, 10:12 AM IST
Highlights
panneerselvam supporter attacked dinakaran support mla


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஏழுமலை மீது பன்னீர்செல்வம் ஆதரவாளர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து தினகரனை ஓரங்கட்டினர். இதையடுத்து தினகரன் ஆதரவு 18 எம்.எ.ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றனர். அதனால் அவர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். தகுதிநீக்கத்தை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை. திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள உட்கோட்டை கிராமத்துக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு ஏழுமலை சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து ஏழுமலை காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது அதேபகுதியைச் சேர்ந்த நைனா கண்ணு என்ற அ.தி.மு.க தொண்டர் ஏழுமலையின் காரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

அதில் கார் கண்ணாடி உடைந்து ஏழுமலையின் இரு உதடுகளும் கிழிந்தன. இதைத் தொடர்ந்து  ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிவிட்டு தப்பியோடிய நைனா கண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். நைனா கண்ணு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. எம்.எல்.ஏ மீதான தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவை பன்னீர்செல்வம் ஆதரவாளர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!