
பங்காளி சண்டையால் அடித்து கொண்ட அதிமுகவினரின் அதிகார வேட்கையால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
கட்சியின் சின்னம் மற்றும் பெயரை யாரும் பயன்படுத்த கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அதுமட்டுமின்றி இன்றைக்குள் தங்களுக்கான சின்னங்களை பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியது.
சேவல் சின்னத்தை கேட்பார்கள் என அனைவரும் எதர்பார்த்த நிலையில் இரட்டை விளக்கு சின்னம் தங்களுக்கு வேண்டுமென ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி அம்மா அதிமுக என்ற பெயரையும் தங்கள் அணிக்கு வழங்கி உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரட்டை இலை போல இரட்டை விளக்கு சின்னம் கிடைத்தால் அமோக வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.
இரட்டை என்ற வார்த்தை வருவது போன்ற ஒரு சின்னத்தை தங்களுக்கு பெற்று விடுவதில் முனைப்பாக உள்ளனர் ஓபிஎஸ் கோஷ்டியினர்.
அதனால் டெல்லியில் இருக்கும் ஓபிஎஸ் அணி இன்று காலை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் பரிந்துரைகளை வழங்கினர்.
இரட்டை விளக்கு சின்னம் தங்களுக்கு நினைத்தபடி கிடைத்தால் விரைவில் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என நம்புகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.