கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்க வாருங்கள்… ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வில்லங்க ரத்தத்தின் ரத்தங்கள் !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 9:43 PM IST
Highlights

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சனைக்கு  நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தேனி பகுதியைச் சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள் சிலர் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அதிமுவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என திரி கொளுத்திப் போட்டார். இது அதிமுகவில் பெரும்  சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ மற்றும் எம்.பிக்கள் கூட்டத்தில் விவாதித்து இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. தற்போது உள்ளது போலவே கட்சியின் நிலைப்பாடு தொடரும் என்றும் கட்சியை வழிநடத்திச் 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தற்போது ஒருவழியாக அதிமுகவில் ஒற்றை தலைமை முழக்கம் அடங்கிய நிலையில், இப்போது ஆண்டிபட்டியில் தமிழக ஆட்சிக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஓபிஎஸ்  கட்சிக்கும்,  ஆட்சி க்கும் தலைமையேற்க வருமாறும், அதுவே ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் எனவும், அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!