இபிஸ்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஓபிஎஸ்..! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்ததால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Sep 27, 2022, 9:31 AM IST
Highlights

பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் துரைமுருகன் நேற்று பதிலறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 
 

இபிஎஸ் ஆதரவாக களம் இறங்கிய ஓபிஎஸ்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் பதிலறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,  எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம் என கூறியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பாலாற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவைக் குறைக்கும் வகையில், அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அம்மாநில முதலமைச்சர் அவர்கள் பேசியுள்ளது தமிழ்நாட்டு மக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. 

மதரீதியில் மக்களை ஆத்திரப்படுத்தி பிளவுபடுத்தும் சங்பரிவார்.! பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்

பாலாற்றின் குறுக்கே அணை

ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசிய மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில், கனகநாச்சியம்மன் திருக்கோயில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாகவும்; இதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும்; குடிப்பள்ளியில் 0.77 டி.எம்.சி. மற்றும் சாந்திபுரத்தில் 0.33 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்; இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி இருக்கிறார். இது ஊடகங்களில் செய்தியாக வெளி வந்துள்ளது. பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகி, செங்கல்பட்டு அருகில் வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிழக நதிகளிலேயே பாலாற்றில்தான் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. 

துரைமுருகன் மறைத்து விட்டார்

இது குறித்து மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அது ஒரு பொதுக் கூட்ட செய்தி என்றும், முன்னர் ஒரு முறை கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக செய்தி வந்தது என்றும், ஆனால் நேரில் பார்த்தபோது அணை கட்டுவதற்கான அறிகுறி அங்கு இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். அதாவது, தற்போதைய செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதுபோல் அவரது அறிக்கை அமைந்துள்ளது. "முன்னர் ஒரு முறை” என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிடுவது 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலம் என்று நினைக்கிறேன். இதை நினைவு வைத்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 2001 முதல் 2006 வரையிலான மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்ததை மறந்துவிட்டார் அல்லது தனக்கு வசதியாக மறைத்துவிட்டார்.

19-01-2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய நீர்வளத் துறை அமைச்சருமான திரு. துரைமுருகன் அவர்கள், பாலாறு சஹாராவாகக்கூடிய நிலைமை உருவாகிவிடும்; அதிகாரிகள் அங்கு அளவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; மிகப் பெரிய கொந்தளிப்பு, பதற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். ஆனால், உண்மை நிலை என்ன என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தன்னுடைய அறிக்கையிலே ஒப்புக் கொண்டிருக்கிறார். இதை நான் தவறாக கூறவில்லை.

எடப்பாடியை நினைத்து அழுவதா..? சிரிப்பதா? என தெரியவில்லை..! கிண்டலடிக்கும் துரைமுருகன்

எதிர்கட்சிகளின் கடமை

அதே சமயத்தில், மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை. இதன் அடிப்படையிலும், கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டது போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதன் அடிப்படையிலும் இந்தப் பிரச்சனையை நான் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மேலும், இது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல, ஆந்திர முதலமைச்சரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. ஆந்திர மாநில முதலமைச்சருடன் நல்லுறவு வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது குறித்து அவருடன் பேசி, மேற்படி இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படியுங்கள்

பாஜக கூட்டணியான இபிஎஸ் ஆட்சியிலேயே ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கல.! ஸ்டாலின் ஆட்சியில் அனுமதி-இறங்கி அடிக்கும் சீமான்

 

click me!