
ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்,கே.நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் 53 சதவீத வாக்குகள் பெற்று, மகத்தான வெற்றி பெறுவார் என ஆன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிரங்கியுள்ளனர்.
இது தவிர தேமுதிக வேட்பாளர் மதிவாணன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், ஜெயலலிதாவிக் அண்ணன் மகள் தீபா மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தினகனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு மின் கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புதிய வியூகங்கள் அமைத்து புதுமையான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொகுதி முழுக்க எடுக்கப்பட்ட சர்வேயில் 53 சதவீத வாக்குள் ஒபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.
அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் இன்னும் கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் என்று பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்தார்