மே-2 ஆம் தேதி இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அரசியல் புரட்சி வெளிபடும்.. அதிரவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2021, 11:01 AM IST
Highlights

ஜனநாயக பண்டிகையில் அனைவரும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அரசியல் புரட்சி மே 2 அன்று வெளிப்படும் என்றார்.

வரும் மே -2 ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் அரசியல் புரட்சி வெளிப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். நாகை மாவட்டம் தோப்புத்துறையில் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற  தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்து ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் காலை முதலே  மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விஜய், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். 

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும்  13.8 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அதேபோல திண்டுக்கல்லில்  20.23 சதவீத வாக்குப் பதிவுகளும், நெல்லையில் 9.95 சதவீத வாக்குகளும், சென்னையில் 11 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக  கூட்டணி ஆதரவு கட்சிகளில் ஒன்றான மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை வாக்களித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  ஜனநாயக பண்டிகையில் அனைவரும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அரசியல் புரட்சி மே 2 அன்று வெளிப்படும் என்றார். கடந்த 5 ஆண்டுகாலம் அதிமுக கூட்டணிக்கு அதரவு தெரிவித்து வந்த அவர், நடப்பு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.  
 

click me!