அட கடவுளே.. விரைவில் இரவுநேர ஊரடங்கு..?? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 4:27 PM IST
Highlights

இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும், தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  

கொரோனா பரவலை கட்டுப் படுத்த  அரசு எடுக்கும் தற்போதைய முயற்சிகளில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, 8-4-2021 என்று அனைத்து மாநிலங்களோடு காணொளி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ். மற்றும் மாநில காவல்துறை தலைவர் ஜே.கே திரிபாதி, பேரிடர் மேலாண்மை துறை ஆணையர். முனைவர் செந்தில்குமார். மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் கலந்துகொண்டது.  அதில் மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் நிலைமை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அவர்களால் எடுத்து வைக்கப்பட்டது. 

அப்போது பிரதமர் பேசுகையில், தற்போது கொரோனா உச்ச நிலையை அடைவது மீண்டும் ஒரு சவாலான நிலைமையை உருவாக்கிக் கொண்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டு  தொட்ட உச்சத்தை ஏற்கனவே தாண்டி உள்ளது. மேலும் கொரோனா வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாக காணப்படுகிறது,  இருப்பினும் பலரிடம் கோவிட் தொய்வு காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நிர்வாகத்தில் அனைத்து துறையினரும் எவ்வாறு ஒருங்கிணைந்து கொரோனா நோய் தொற்று பரவலை சமாளித்தோமோ, அதே வேகத்தில் தற்போதும் செயல்பட்டு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  நிர்வாகத்தில் சுணக்கம் இருக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு கடந்த ஆண்டு பெற்ற அனுபவம் மற்றும் தற்போது நம்மிடம் உள்ள கூடுதல் படுக்கை வசதிகள், உயிர்காக்கும் கருவிகள் மற்றும் தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை மிகவும் எச்சரிக்கையாகவும், கடுமையாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், அங்குள்ள அனைவரையும் சோதனைக்குட்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சோதனை செய்வதன் மூலம், நோய் உள்ளவர்களுக்கு உடனடி  சிகிச்சை அளிப்பதுவுமே கொரோனா கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி என குறிப்பிட்டார். மேலும் அண்மைக்காலங்களில் நோய் அறிகுறி உள்ளவர்கள், நோய் உள்ளதை அறியாமலும், கொரோனா சோதனைக்கு உட்படுத்தாமல் இருக்கின்ற காரணத்தினால் வீட்டில் உள்ள பலருக்கு நோய் பரவ காரணமாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார். சோதனை அதிகப்படுத்தி கூடுதல் எண்ணிக்கை வந்தபோதிலும், இந்த முறையை பின்பற்றவில்லை என்றால், இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது என அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனாவினால் நோய்த்தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 21 வரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. தற்போது ஏப்ரல்  2021ல் சராசரியாக தினமும் 3900 க்கும் அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதை  கருத்தில் கொண்டும் பொது மக்கள் நலன் கருதியும், தமிழ்நாடு அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 30-4-2021 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்துள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு 10-4-2021 முதல்  முற்றிலுமாக தடை விதித்தும், ஒருசில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும், அரசு  8-4-2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும், தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க  அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தமிழ்நாடு  மக்கள் தொடர்பு அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

click me!