மாநில உரிமைகளை மொத்தமாக ஆட்டயபோட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.. எடப்பாடியார் மீது பாயும் கி.வீரமணி..

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 3:10 PM IST
Highlights

இந்நடவடிக்கை அறம் சார்ந்ததா? ஜனநாயகத்திற்குரிய நடைமுறையா? இந்த ஆளுநர் நியமித்துள்ள பல துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினராக இருக்கிறார்கள் என்றும் பரவலாகப் பேசப்பட்டது! 

பெயரளவுக்குத்தான் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியே தவிர, அதன் மூக்கணாங்கயிறோ மத்திய பா.ஜ.க. ஆட்சியிடம்தான். துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு நேரடியான அதிகாரம் கிடையாது. அப்படி இருந்தும் தமிழக ஆளுநர் அந்த அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது எப்படி? புதிதாக வரவுள்ள அரசுக்கு - உரிமை மீட்புப் பணிகள் - கடமைகள் ஏராளம் உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முதல்வரானதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக பறிபோன மாநில அரசின் உரிமைகள் பலப்பல.கல்வித் துறையிலும், விவசாயத் துறையிலும், மின்சாரத் துறையிலும், நிதித்துறையிலும் மிக அதிகம்.

ஊழல் செய்து சிக்கிக்கொண்ட டைரிகள் மற்றும் சிலவற்றை ஒரு பிடியாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு - மோடி அரசு, பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க, அ.தி.மு.க. அரசினைக் குறி வைத்து, குனிய வைத்து, அதன் முதுகில்மீது ஏறி நின்று - தனது உயரத்தை அதிகரித்துவிட்டதாக ஒரு போலித் தோற்றத்தை -  பொய் முகத்தை - விசித்திரமானதோர் ‘மாயையையும்‘ உருவாக்கிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளது! 

புதிய ஆளுநர் புரோகித் அவர்கள் வந்தவுடன், அவர் ஒரு தனி ராஜ்ய பாரமே நடத்திடும் வண்ணம் அலுவலகங்களுக்குச் சென்று ஆராய்வு என்று ஒரு இணை அரசாங்கம் (Parallel Government) நடத்தினர். ஆளுங்கட்சி தனது எதிர்ப்பைக் காட்டாதது மட்டுமல்லாமல், இதை எதிர்த்து மாநில உரிமைக்குப் போராடிய எதிர்க்கட்சி தி.மு.க.வினரைப் பயன்படுத்திக் கொள்ளவும் மனமின்றி, ஆளுநருக்கு அதிகாரமுண்டு என்று கூறி, தனக்குத்தானே குழியும் பறித்த வெட்கக்கேடும் நடந்தது. ஆளுநர் - அரசமைப்புச் சட்டத்தை மறந்து, தானே ஆளுமையை நடத்தத் தொடங்கினார்! துணைவேந்தர்கள் நியமனம் ‘‘கோட்டையிலிருந்து’’ ஏனோ ‘‘இராஜ்பவனுக்கு’’ மாற்றப்பட்டது.

1. பல்கலைக் கழக வேந்தர் ஆளுநர் என்று ஒரு ex-officio பதவிதான். ஆளுநர் பெயரில் அரசு ஆணைகள் (By Order of the Governor) என்று வந்தாலும், உண்மையில் அமைச்சரவையின் ஆளுமைதானேயொழிய அவருடையதல்ல.

 2. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது   -ஆளுநரால் தயாரிக்கப்பட்ட உரை அல்ல, அமைச்சரவையால். அவர் தனது சொந்த விருப்பத்தை - அதிகாரத்தை அதில் புகுத்த முடியாது. அமைச்சரவை தயாரித்த (கொள்கை) உரையை அவர் படிப்பதற்கு மட்டுமே உரிமையாகும்! இது காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. அ.தி.மு.க. முதல்வராக பழனிச்சாமியின் காலத்தில் தலைகீழாக மாறியது. 
அதுபோலவே, செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, துணைவேந்தர்கள் நியமனம் என்பது தமிழக அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாகவே இருந்தது.

ஆளுநர் ஒப்புதல் தருபவராக மட்டுமே இருந்த நடைமுறை - பிறகு, தலைகீழாக  அ.தி.மு.க. முதல்வராக பழனிசாமியின் காலத்தில் மாறியது.
இவர்கள் மறுப்பேதும் கூறாது, மண்டியிட்டது மாநில உரிமைப் பறிப்பு அல்லவா? ஊழலைக் களைய இப்படி ஒரு புது ஏற்பாடு என்று ‘சப்பை’ கட்டும் வாதம்கூட சொத்தையானது என்பது, ஆளுநரால் நியமிக்கப்பட்ட சில துணைவேந்தர்கள் லஞ்சம், ஒழுக்கத் தவறுகள் மூலம் உயர்நீதிமன்றத்தில் நிற்கும் அவலம் ஏற்படவில்லையா?

ஜனநாயகத்திற்குரிய நடைமுறையா? ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, மே 2 இல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, புதிய ஆட்சி வரும்வரை ஏன் ஆளுநர் காத்திராமல், அவசர அவசரமாக இரண்டு துணைவேந்தர்கள் பதவியை நிரப்புகிறார்? ஒரு பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு - அதுவும் அனுபவமற்ற ஒருவரைக் கொண்டு ஏன் நிரப்பியுள்ளார்?

இந்நடவடிக்கை அறம் சார்ந்ததா? ஜனநாயகத்திற்குரிய நடைமுறையா? இந்த ஆளுநர் நியமித்துள்ள பல துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினராக இருக்கிறார்கள் என்றும் பரவலாகப் பேசப்பட்டது! பிற மாநிலத்திலிருந்து ‘தேடல் குழு உறுப்பினர்கள் இவரது சார்பில் நியமிக்கப்பட்டதும் மறுக்கப்படவே முடியாத உண்மை! இப்படி மாநிலத்தின் கல்வி உரிமைகளை வெளியிலிருந்து (மத்திய ஆட்சியால்) பறிக்கப்படுவது, மாநிலத்திற்குள்ளேயிருந்தே (ஆளுநர்) இப்படி பறிக்கப்படுவதற்கு முடிவு கட்டவேண்டும்.

புதிய அரசின்  முதற்பணியாக அமைய வேண்டியது அவசர அவசியம்!

துணைவேந்தர்கள் நியமனம் பழையபடி மாநில அரசின்  உரிமையாக இருக்கவேண்டுமே தவிர, கொல்லைப்புற வழியாக - ஆளுநர்மூலம் - மத்திய அரசின் நியமனமாக மாற்றப்பட்டுள்ள இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது  -  புதிதாகப் பதவியேற்கவுள்ள மாநில அரசின் முதற்பணியாக அமைய வேண்டியது அவசர அவசியமாகும்! இவ்வாறி அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. 
 

click me!