
பொதுக்குழுவிற்கு புறப்பட்ட ஓபிஎஸ்- இபிஎஸ்
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வீட்டில் இருந்து புறப்பட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள வானகரத்திற்கு செல்கின்றனர். வழி நெடுகிலும் ஆயிர்கணக்கான தொண்டர்கள் மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். வானகரம் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நெரிசலாக உள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை தான் உள்ளது. இபிஎஸ் வாகனத்திற்கு அதிமுக தொண்டர்கள் மலர் தூவி ஆரவாரமாக வரவேற்றனர்.
வாகன நெரிசலில் வாகனங்கள்
ஆனால் ஓபிஎஸ் வாகனத்தின் மேல் எந்தவித மலர்களும் தூவாமல் அமைதியான முறையில் சென்றது.முன்னதாக வீட்டில் கோ பூஜை நடத்திய ஓபிஎஸ் ஜெயலலிதா உருவம் பதித்த பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவிற்கு புறப்பட்டார்.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட அரங்கில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்த உறுப்பினர்களும் கையெழுத்திடாமல் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனிடையே பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அதிமுக வளர்ச்சிக்கும், நன்மைக்கும் நல்ல வித முடிவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்