சோதனையில் எதுவும் சிக்கவில்லை.. எந்த வழக்காக இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்க தயார்.. அசராத KC.வீரமணி..!

By vinoth kumarFirst Published Sep 17, 2021, 12:27 PM IST
Highlights

சோதனை முடிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியே சென்ற போது, கே.சி.வீரமணி வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் காரை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக அரசில் பத்திரப்பதிவு மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணிக்குத் தொடர்புடைய 35 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இதில் 34 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2016 முதல் 2021 வரை தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரின் சொத்து மதிப்பு 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதன்படி அதிரடியாக நேற்று காலை முதல் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், 5 கணினி கார்டு டிஸ்க், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு வழக்குக்குத் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணல் கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் சோதனை முடிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியே சென்ற போது, கே.சி.வீரமணி வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் காரை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தொண்டர்களை கே.சி.வீரமணி சமானாதப்படுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி;- இந்த சோதனையால் திமுகவினர் விளம்பரம் தேடிக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சோதனைகள் ஒன்றும் புதிது கிடையாது. அதிமுக இன்னும் நூறு ஆண்டுகாலம் நிலை நிற்கும். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. எந்தவிதமான வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!