தினகரனை நம்பி இனி யாரும் அவர் பின்னால் செல்ல வேண்டாம். அங்கு இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும்
சசிகலா விலகலால் அ.தி.மு.க.வில் நீடித்து வந்த குழப்பம் தீர்ந்துள்ளது. இதனை தொண்டர்கள் அனைவரும் முழுமையாக வரவேற்றுள்ளனர் என்று வைகைச்செல்வன் கூறினார்.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. செய்தித்தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன், ‘’சசிகலா விலகலால் அ.தி.மு.க.வில் நீடித்து வந்த குழப்பம் தீர்ந்துள்ளது. அவரது விலகல் கட்சியினருக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனை தொண்டர்கள் அனைவரும் முழுமையாக வரவேற்றுள்ளனர். ஜெயலலிதாவின் விருப்பப்படி நல்ல முடிவை சசிகலா எடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் புகழேந்தி இதுகுறித்து, ‘’சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் முழு ஓய்வில் இருப்பார். தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதன்படியே அவர் முடிவு எடுத்துள்ளார். இதனை அ.தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுமையாக வரவேற்றுள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்துள்ளது. நல்ல முடிவை அவர் எடுத்துள்ளார். கட்சிக்கு புது தெம்பு கிடைத்துள்ளது. தினகரனை நம்பி இனி யாரும் அவர் பின்னால் செல்ல வேண்டாம். அங்கு இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.