அடம்பிடிக்கும் வைகோ... அனுசரிக்காத ஸ்டாலின்... இன்று மாலை எட்டப்படுமா இறுதி முடிவு?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 4, 2021, 12:06 PM IST
Highlights

ஆனால் திமுகவோ மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளது வெறும் 5 சீட்டுகள் தானாம், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கன்டிஷன் வேறு. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது திமுக.  திமுக கூட்டணியைப் பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மல்லை சத்யா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியமித்துள்ளார். 

அந்த குழு சில தினங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உட்னபாடு ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2ம் தேதி அன்று தாயகம் விரைந்த திமுக நிர்வாகிகள் கேகேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜா அருள்மொழி  ஆகியோர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வைகோ 10 தொகுதிகள் வேண்டும் என்றும், அதுவும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் உறுதியாக கூறியதாக தெரிகிறது. ஆனால் திமுகவோ மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளது வெறும் 5 சீட்டுகள் தானாம், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கன்டிஷன் வேறு. 

இதனால் திமுக - மதிமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்த முறை 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் கட்சியின் அங்கீகாரத்தை காக்க முடியும் என்பதால் வைகோ தனது முடிவால் தீர்மானமாக இருக்கிறாராம். இந்நிலையில் திமுக - மதிமுக இடையே இன்று மாலை 6 மணிக்கு 2வது கட்ட பேச்சுவார்த்தை  நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இன்றைய பேச்சுவார்த்தையிலாவது இறுதிக்கட்டம் எட்டப்படுமா? என தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

click me!