அதிமுகவில் ஒற்றை தலைமை கோரி நிர்வாகிகள் கோஷம் போட்டு வரும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழுவில் புதிய பதவி வழங்கப்பட இருக்கிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரி நிர்வாகிகள் கோஷம் போட்டு வரும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழுவில் புதிய பதவி வழங்கப்பட இருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியை பெற திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இரட்டைத் தலைமைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு பொதுக்குழுவை 12ம் தேதி கூட்ட கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்தும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும் அந்தப்பதவிகள் மூலம் கட்சியை நிர்வகித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை செல்லாது என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது தற்காலிக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டால் அதனை சமாளிக்க ஓ.பன்னிர்செல்வத்திற்கு துணை பொதுச்செயலாளர் பதவியை அளிப்பது என்றும் எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.