பாஜகவுக்கு எதிராக கோஷம்... 'என் மகனின் அனுபவத்தை நானும் அனுபவித்து இருக்கிறேன்...' தத்தளிக்கும் தமிழிசை!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2019, 4:47 PM IST
Highlights

ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது, மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்.
 

திருச்சி செல்வதற்காக, இன்று தனது மகன், மகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு வழக்கம் போல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தமிழிசையின் மகன் சுகந்தன், பாஜகவிற்கு எதிராக கூச்சலிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று கூறினார். இது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழிசை, ’’அன்பின் அன்பான வணக்கம், நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். நேற்றைய தினம் மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், நான் திருச்சி வரவில்லை.

நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா? என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார். இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.குடும்பத்தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது, குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் தான் இவை. ஏன்! அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். ஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது, மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்.

அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள். எந்தெந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான். என் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை’’ எனத் தெரிவித்துள்ளார். 
 

click me!