அரெஸ்ட்டில் இருந்து தப்பிக்க ஊர் ஊராய் ஓடிய நெல்லை கண்ணன் !! கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சுற்றி வளைத்த போலீஸ் !!

By Selvanayagam PFirst Published Jan 2, 2020, 5:23 AM IST
Highlights

பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த நெல்லை கண்ணன் கேரளாவுக்கு தப்ப திட்டமிட்டிருந்ததாகவும், 10 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இறுதியில் போலீசின் கிடுக்கிப்பியில் அவர் சிக்கியுள்ளார்.

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் ஆன்மீகவாதியுமான  நெல்லை கண்ணன், கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாஜகவினர் , நெல்லை டவுனில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்  நெல்லை கண்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கும் வந்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் நெல்லை கண்ணனை, மதுரைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பேசினர். அவர்கள் சிகிச்சை அளிக்க உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் மதுரை புறப்பட்டார். இதற்கிடையில் மதுரை பாஜகவினருக்கும்  இந்த தகவல் கிடைத்தது. அவர்கள் 3 தனியார் மருத்துவமனைகள் முன்பு திரண்டனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.

இதையடுத்து மதுரையில்  அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது  என  நெல்லை கண்ணனுக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர்  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த ஆம்புலன்சு, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்றது.

அதன்பிறகு நெல்லை கண்ணன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனாலும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு முன்ஜாமீன் பெறலாம் என திட்டமிட்டுள்ளார். 

இதையடுத்து சில முக்கிய புள்ளிகளின் உதவியுடன் நெல்லை கண்ணன் பெரம்பலூர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார் இது குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பெரும்படையுடன் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

click me!